பாட்னா: பிஹார் மாநிலத்தின் சஹர்சா மாவட்டம், சிம்ரி பக்தியார்பூர் நகரில் முகமது அன்வர் என்பவரின் மகன் முகமது அப்துல்லாவுக்கும் முகமது ஜாவேத் என்பவரின் மகளுக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
பின்னர் திருமண விருந்தில் சிக்கன் பரிமாறப்பட்டது. அப்போது தங்களுக்கு மட்டன் விருந்து அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக மணமகன் வீட்டார் குற்றம் சாட்டினர். இதில் இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
ஒரு வீடியோ பதிவில், அங்கிருந்த நபர்கள் விருந்தினர்களைக் கம்புகளால் தாக்குவதையும் வாள்களை வீசுவதையும் காண முடிகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்த பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.
திருமண நிகழ்ச்சியில் நடந்த இருதரப்பு மோதலில் 12 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிம்ரி பக்தியார்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.