பெங்களூரு: கர்நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயிரிழந்தார். கணவரின் கண் முன்னால் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகிற்கு சுற்றுலா சென்றார். இங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் மடிகேரியை அடுத்துள்ள துபாரே யானைகள் முகாமுக்கு சென்றனர். அங்கு 10 க்கும் மேற்பட்ட யானைகள் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தன. இதனைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
அப்போது மார்த்தாண்டா, கஞ்சன் ஆகிய இரு யானைகள் ஒன்றையொன்று தாக்கின. இந்த யானைகளுக்கு இடையே சிக்கிய ஜாய்சி கீழே விழுந்தார். அருகிலிருந்த அவரது கணவர் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மனைவியை மீட்க தீவிர முயற்சி செய்தார். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. யானைகள் சண்டையில் படுகாயமடைந்த ஜாய்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கையில் குழந்தையுடன் மனைவியை யானைகளிடம் இருந்து மீட்க போராடிய கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கர்நாடக வனத் துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே கூறுகையில், ''உயிரிழந்த சுற்றுலா பயணியின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் யானைகளை தொடவோ, உணவுப் பொருட்கள் ஊட்டவோ கூடாது. எப்போதும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.