புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்காக, 3 நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் இருந்தாலும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் போது இந்திய அரசியலமைப்பின் 369-வது பிரிவின் கீழ் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆகஸ்ட் 16, 17, 18-ம் தேதிகளில் சிறப்பு கூட்டத்தொடர் இருக்கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து விட்டு விரைவில் பதில் அளிப்பதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற இந்த மசோதா மீதான வாக்கெடுப்பின் போது 528 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்தனர். அதன்படி, 352 பேரின் வாக்குகள் இருந்தால் மட்டுமே மசோதா நிறைவேறும் நிலை இருந்தது. ஆனால், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் விழுந்தன. இதனால் மசோதா தோல்வி அடைந்தது.
இந்த முறை மசோதா தோல்வி அடையாமல் இருக்க எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மக்களவையில் மத்திய அரசுக்குப் போதுமான பலம் உள்ளன. அதேபோல் மாநிலங்களவையில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டிக்குத் தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கையைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி நெருங்கியுள்ளது. எனவே, இம்முறை 2 மசோதாக்களும் நிறைவேறும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நம்பிக்கையுடன் உள்ளது.