புதுடெல்லி: காவிரியில் தமிழகத்துக்கு டிசம்பரில் வழங்க வேண்டிய 7.35 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி நீர் தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும் அதில் பங்கேற்றனர்.
தமிழக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் பேசுகையில், ‘‘தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 87.554 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4282 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 2986 கன அடி நீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.
காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி டிசம்பரில் கர்நாடகா தமிழகத்துக்கு 7.35 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும். அந்த நீரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் கர்நாடக அரசு உறுதிப்படுத்த வேண்டும்''என வலியுறுத்தினார்.
இதற்கு கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள், "தற்போது காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
எனவே நிகழாண்டில் உச்ச நீதிமன்ற உத்தரவை காட்டிலும் கூடுதலாகவே தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் இறுதி வரை 158 டிஎம்சி நீர் திறந்து விட்டிருக்க வேண்டிய நிலையில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு 315.76 டிஎம்சி நீரை திறந்துவிட்டுள்ளது" என்றனர்.
இதனை ஏற்ற ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், "டிசம்பரில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 7.35 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்"என உத்தரவிட்டார்.