நிதிஷ் குமார்
பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஏப்ரல் 14 அன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இக்கூட்டத்திற்குப் பிறகு நிதிஷ் குமார் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினரான பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பல முக்கிய செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தற்போதைய நிதிஷ் குமார் அமைச்சரவையின் கடைசி கூட்டமாக இருக்கக்கூடும் என்றும், இக்கூட்டத்திற்குப் பிறகு நிதிஷ் குமார் தனது ராஜினாமாவைச் சமர்ப்பிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பின்னர் ஏப்ரல் 15 அன்று புதிய முதல்வர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் குமார் ஜா, “நிதிஷ் குமார் முதல்வர் பதவியை வகித்தாலும் வகிக்காவிட்டாலும், பிஹாரின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுவார்.
பிஹாரைப் பொறுத்தவரை, 2025-30 ஆம் ஆண்டிற்கான தேர்தல் ஆணை எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் தலைமையில், என்டிஏ கூட்டணியின் ஆதரவுடன் நாங்கள் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றோம். அமையவுள்ள புதிய அரசாங்கமும் நிதிஷ் குமாரின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி, அவரது வழிகாட்டுதலின்படியே செயல்படும். அவர் முதல்வர் பதவியில் இல்லாவிட்டாலும், அவரது முழு கவனமும் பிஹாரின் மீதே இருக்கும். நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் பங்கேற்பதற்காக மட்டுமே அவர் டெல்லிக்குச் செல்வார்" என்று கூறினார்.