கோப்புப்படம்
புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் காலியாக உள்ள 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 7 வார்டுகளில் வெற்றி பெற்றது. டெல்லியில் 10 மாதங்களுக்கு முன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆம் ஆத்மி 3 வார்டுகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
பாஜகவின் 9 வார்டுகள் இடைத்தேர்தலை சந்தித்த நிலையில் அக்கட்சி 2 வார்டுகளை இழந்துள்ளது. ஒன்றை காங்கிரஸ் கட்சியிடமும் மற்றொன்றை பார்வர்டு பிளாக் கட்சியிடமும் பாஜக இழந்துள்ளது.
மேலும் பாஜகவின் நரைனா வார்டை இம்முறை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. அதே வேளையில் ஆம் ஆத்மியின் சாந்தினி சவுக் வார்டில் இம்முறை பாஜக வென்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களில் பாஜவின் பலம் இனி 122 ஆக இருக்கும். ஆம் ஆத்மியின் பலம் 102 ஆக நீடிக்கும். காங்கிரஸின் பலம் 9 ஆக அதிகரிக்கும்.
டெல்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். இதுபோல் டெல்லி ஆத்மி தலைவராக சவுரப் பரத்வாஜ் பொறுப்பேற்ற பிறகு அக்கட்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இதுவாகும்.