இந்தியா

உ.பி. விபரீதம்: ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

இருவரை மீட்டது விமானப் படை

வெற்றி மயிலோன்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய ஐந்து சிறுவர்களில், ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில் நேற்று (சனிக்கிழமை) மதியம், ஆபத்தை அறியாமல் ரீல்ஸ் படமாக்குவதற்காக 5 சிறுவர்கள் 60 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறினர். உச்சியிலிருந்து கீழே இறங்கும்போது, அவர்களின் பாரம் தாங்காமல் ஏணி உடைந்ததில், மூன்று சிறுவர்கள் சுமார் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர்.

இதில், 13 வயதான சித்தார்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு சிறுவர்கள் தண்ணீர் தொட்டியின் உச்சியில் சிக்கிக் கொண்டதால், உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்தன. நிலைமை மோசமடைந்ததால், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு இந்திய விமானப்படையின் உதவியை நாடியது. இந்த மீட்புப் பணிக்காக ஒரு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. சுமார் 16 மணி நேர முயற்சிக்குப் பிறகு, இன்று அதிகாலை 5:20 மணியளவில், தண்ணீர் தொட்டியின் மேல் சிக்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் சிவஷரணப்பா ஜி.என் மற்றும் எஸ்எஸ்பி அபிஷேக் மகாஜன் உள்ளிட்ட அதிகாரிகள் இரவு முழுவதும் சம்பவ இடத்தில் இருந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

SCROLL FOR NEXT