இந்தியா

பாம்பு கடிக்குச் சிகிச்சையளித்த மந்திரவாதி - கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன் பலி

செய்திப்பிரிவு

அம்ரோகா: உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.

அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாம்பு விஷம் கங்கையில் மூழ்கினால் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய பெற்றோர் அவர்களது மகனை கங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

          

மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக மிதவை போன்ற அமைப்பில் சிறுவனை கட்டிவைத்த உறவினர்கள், சுமார் 12 மணி நேரம் அவனை கங்கை தண்ணீரிலேயே மூழ்கி இருக்குமாறு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அசைவற்றுக் கிடக்கும் சிறுவனை சுற்றி ஏராளமான மக்கள் வேடிக்கை பார்ப்பதும், ஏதேனும் அதிசயம் நடக்கும் என காத்திருப்பதும் பதிவாகியுள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்தும் எந்த அற்புதமும் நிகழவில்லை. முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலும், நீண்ட நேரம் கடும் குளிரில் நீரில் இருந்ததாலும் பாம்பு கடித்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சிறுவனின் இறப்பு குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘‘மக்களின் அறியாமையை முதலீடாகக் கொண்டு இதுபோன்ற போலி மந்திரவாதிகள் உயிரோடு விளையாடுகிறார்கள். பாம்பு கடிக்கு மருத்துவ சிகிச்சையே முதன் மையானது என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்’’ என்று பதிவிட்டுள்ளனர். உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் சிகிச்சையளித்த மந்திர வாதியை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் தற்போது வலுத்துள்ளன.

SCROLL FOR NEXT