பனாஜி: பாலியல் வன்கொடுமை வழக்கில் தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளை நேற்று தீர்ப்பு வழங்கியது.
நாட்டின் பிரபலமான புலனாய்வு இதழ்களில் ஒன்று தெஹல்கா. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில், தெஹல்காவின் வருடாந்திர ‘திங்க்பெஸ்ட்’ நிகழ்ச்சி கோவாவில் நடைபெற்றது. அப்போது, அதன் நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் (62) விடுதியின் மின்தூக்கியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என அந்நிறுவன பெண் ஊழியர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட தேஜ்பால் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கோவா விசாரணை நீதிமன்றம், 2021-ல் தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி அவரை விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கோவா அரசு மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளையில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் டாக்டர் நீலா கோகலே மற்றும் அமித் ஜம்சந்தேகர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376(2)(f), 376(2)(k) மற்றும் 354A, 354B ஆகியவற்றின் கீழ் தருண் தேஜ்பால் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. எனவே, அவரை விடுதலை செய்து பிறப்பித்த கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்கிறோம். மேலும் தேஜ்பால் இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கிறோம்” என்றனர்.
முன்னதாக தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது தேஜ்பால் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது, தனக்கு இப்போது 62 வயதாகிறது என்றும் மனைவி, 2 பிள்ளைகள் இருப்பதால் கருணை காட்டும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். இதுபோல அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நேற்று பிற்பகலில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது, தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் 2 வாரத்துக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.