பிரதமர் மோடி.
வடக்கு 24 பர்கானாஸ்: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ரவுடிகளையும், பாலியல் குற்றவாளிகளையும் வேட்டையாடிப் பிடிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் பங்கான் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "திரிணமூல் காங்கிரஸின் காட்டு தர்பார் ஆட்சியால் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. அவர்கள் மிகப்பெரிய துரோகத்திற்கு ஆளாகியுள்ளனர். சந்தேஷ்காலியில் நமது சகோதரிகளுக்கு எதிராகக் கொடூரமான அட்டூழியங்கள் இழைக்கப்பட்டுள்ளன.
திரிணமூல் காங்கிரஸின் காட்டு தர்பார் ஆட்சியின் கீழ், இளம் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மே 4-ஆம் தேதிக்குப் பிறகு, பாஜக அரசு ஒவ்வொரு ரவுடியையும், பாலியல் குற்றவாளியையும் வேட்டையாடிப் பிடித்து, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்கும். பாஜக பெண்களுக்குப் பாதுகாப்பையும், வாய்ப்புகளையும் ஒருங்கே வழங்குகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக அரசாங்கம், ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 36,000 தொகையை நேரடியாகச் செலுத்தும். ஆஷா (ASHA) பணியாளர்கள் மற்றும் பிற பெண் சுகாதாரப் பணியாளர்களின் ஊதியம் குறித்தும் மேற்கு வங்க பாஜக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எங்கள் அரசாங்கம் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கும்.
பொது சுகாதார மையங்களில் மருத்துவச் சிகிச்சைகளுக்கு 80% கட்டணச் சலுகை வழங்கப்படும். மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். கர்ப்பக் காலத்தில் ரூ.21,000 நிதியுதவியும், மகள்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்யும்போது ரூ.50,000 நிதியுதவியும் பாஜக அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும்.
பெண்கள் சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்காக வங்கிகளிடமிருந்து ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். வங்கிகளுக்குக் கடன் வழங்கும்போது ஒரு உத்தரவாதம் தேவைப்படும். ஆனால், சகோதரிகளே, அந்த உத்தரவாதத்தை நீங்கள் வழங்கத் தேவையில்லை. அந்த உத்தரவாதத்தை உங்கள் சகோதரனான மோடியே உங்களுக்கு வழங்குவார்.
மேற்கு வங்கத்தின் விளையாட்டு கலாச்சாரத்திற்கு பாஜக ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். திரிணமூல் காங்கிரஸின் 'சிண்டிகேட்' இங்குள்ள விளையாட்டுச் சூழல் அமைப்பையே சீரழித்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடந்த நிகழ்வுகளும், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களைச் சென்றடைந்த அந்தப் படங்களும், இங்கு நிலவும் 'மகா காட்டு தர்பார்' கலாச்சாரத்தின் நேரடி விளைவுகளே ஆகும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், மேற்கு வங்கத்தில் ஒரு புதிய, சிறப்பான விளையாட்டுச் சூழல் அமைப்பு உருவாக்கப்படும்" என்று அவர் கூறினார்.