இந்தியா

மக்களவையில் நிறைவேறியது பிறப்பு, இறப்பு திருத்த மசோதா: நோக்கம் என்ன?

மோகன் கணபதி

புதுடெல்லி: பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா 2026 கடந்த 29-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மசோதா இன்று மதியம் பரிசீலனைக்கும், நிறைவேற்றத்துக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய பேரணியில் பங்கேற்றவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், இந்த மசோதா மீது விவாதம் மேற்கொள்ளப்படவில்லை.

எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

முக்கியமான மசோதா குறித்து விவாதம் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்பிய நிலையில், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது அதிருப்தி அளிப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.

“இது துரதிருஷ்டவசமானது. தயவுசெய்து எதிர்காலத்திலாவது இப்படி நடந்து கொள்ளாதீர்கள். உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள், உங்களிடமிருந்து பதில்களை எதிர்பார்ப்பார்கள்” என கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.

“எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது,” என்று மக்களவையை நடத்திய பாஜக எம்பி திலீப் சைகியா தெரிவித்தார்.

மசோதாவின் முக்கியத்துவம் என்ன?:

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969 தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த சட்டப்படி, பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வது கட்டாயமாகும்.

இந்த சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் திருத்தம், பிறப்பு அல்லது இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.

மேலும், தாமதமான பதிவுக்கான நடைமுறைகளை மேலும் கடுமையாக்கும் நோக்கம் கொண்டது.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகவும், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவும் இருந்தால், அந்த காலகட்டத்தில் பதிவாளரிடம் அளிக்கப்படும் விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவர் ஆகியோரின் ஒப்புலுக்குப் பிறகே பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகு பதிவாளரிடம் விண்ணப்பித்தால், அது நீதித்துறை நடுவரின் உத்தரவின் பேரில் மட்டுமே பதிவு செய்யப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ், சட்டப்பூர்வ அடையாளத்தை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT