கன்சிராம்
லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தலித் மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமிற்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
சமூக நீதிப் போராட்டத்தின் முன்னோடியும், ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியுமான கன்சிராமின் பிறந்த தினம் நேற்று (மார்ச் 15) கொண்டாடப்பட்ட நிலையில், ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: சமூக நீதிக்காகப் போராடிய மாபெரும் வீரன், நலிவடைந்த சமூக மக்கள் விழிப்புணர்வின் வழிகாட்டி, கன்சிராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இந்த உயரிய கவுரவம் கன்சிராமுக்கும், லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள், பங்களிப்பு மற்றும் சுய மரியாதைக்கான பாதையை காட்டிய அவரது இயக்கத்திற்கும் நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதையாக அமையும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.