இந்தியா

கபடி போட்டியில் பந்தயம்: கர்நாடக அமைச்சர் மீது வழக்கு

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தும்கூரில் கடந்த பிப்ரவரியில் கல்லூரி மாணவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, நட்பின் அடிப்படையில் விஜயபுரா அணி வெற்றி பெறும் என தெரிவித்து, ரூ.500 பந்தயம் கட்டினார்.

அதற்கு மேடையில் இருந்த தும்கூர் மாவட்ட ஆட்சியர் சுபா கல்யாண், விஜயபுரா அணி தோற்கும் என கூறினார். இறுதியில் தட்சிண கன்னட அணி விஜயபுராவை 36- 26 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கும் போது, ​​அமைச்சர் பரமேஸ்வரா, தான் தோற்றுவிட்டதாகக் கூறி பந்தய பணமான ரூ.500-ஐ வழங்கினார்.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் எச்.ஆர்.நாகபூஷன் என்பவர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிபதி கே.என்.சிவகுமார், பரமேஸ்வரா மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT