கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 152 தொகுதிகளுக்கு நடைபெறும் இத்தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 41.11% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு இன்றும், ஏப்ரல் 29-ம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கின்றன. முதல்கட்டத்தில் 152 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில், மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்ளனர். மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள். பெர்ஹாம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, லிபிகா நினைவு பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, “நந்திகிராம் மற்றும் பபானிபூர் தொகுதியில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, சாமானிய மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். அமைதியைக் குலைக்க முனையும் எவரையும் நாங்கள் விரட்டியடிப்போம்” என தெரிவித்தார்.
தேர்தலுக்கு முதல் நாளான நேற்று இரவு 8 மணி அளவில் முர்ஷிதாபாத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், பெண் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவம் இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் நடந்தது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து எங்களால் உறுதியாகக் கூற முடியாது. நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எந்த நேரத்திலும் மற்றொரு அசம்பாவிதம் நடக்கலாம். அரசியல் தலைவர்கள் இங்கு வந்தனர். அதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
முர்ஷிதாபாத் பெட்ரோல் குண்டு வீச்சி சம்பவம் குறித்துப் பேசிய பாஜக தலைவர் திலீப் கோஷ், “முர்ஷிதாபாத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டம். அங்கு ஒவ்வொரு விஷயத்திலும் முறைகேடுகள் மலிந்துள்ளன. நாட்டில் எத்தகைய நிகழ்வுகள் நடந்தாலும் அவை அனைத்தும் அங்கும் எதிரொலிக்கும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும், வக்பு வாரிய மசோதா நிறைவேற்றப்பட்டபோதும் அங்கு கலவரங்கள் ஏற்பட்டன. எங்கள் கட்சி அலுவலகமும் கோயிலும் எரிக்கப்பட்டன. வங்கதேசத்தில் இருந்து பலர் இங்கு ஊடுருவியுள்ளனர். அவர்கள் இங்கு வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு அமைதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆட்சி மாற்றம் நிகழும்போது அனைத்தும் முழுமையாக மாறிவிடும்” என தெரிவித்தார்.