இந்தியா

அசாம் வெள்ளம்: பலி 98 ஆக அதிகரிப்பு; 1.55 லட்சம் பேர் பாதிப்பு

வெற்றி மயிலோன்

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில், இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளது. மேலும், அசாமில் 1.55 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் தற்போது 13 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு தொடர்கிறது. இதில் கோலாகாட் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அம்மாவட்டத்தில் 58,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சிவசாகர் மாவட்டத்தில் 48,286 பேரும், ஜோர்ஹாட் மாவட்டத்தில் 25,259 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாரைடியோ மாவட்டத்தின் மக்மோரா வட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு வெள்ளம் தொடர்பான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளது.

அசாமில் உள்ள சிவசாகர், கோலாகாட், நாகான், ஹோஜாய், சோனித்பூர், தேமாஜி, டர்ராங், பிஸ்வநாத், காம்ரூப் பெருநகரம், லக்கிம்பூர், உதல்குரி, ஜோர்ஹாட் மற்றும் சரைடியோ ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் தற்போதுவரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் தகவலின்படி, தற்போது அசாமில் 1,55,849 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 நிவாரண முகாம்களில், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். மேலும், 18 நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் 10,748.64 ஹெக்டேர் பயிர்கள் மூழ்கியுள்ளன என்றும், 47,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.

ஜோர்ஹாட், சிவசாகர், கோலாகாட் மற்றும் சாரைடியோ ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 9 முதல் 30-ம் தேதி வரை வெள்ளச் சேதங்கள் குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணியை அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT