“நிதிஷ் அரசுக்கு ஒரு நிபந்தனையுடன் ஆதரவு அளிக்க தயார்” என்று ஏஐஎம்ஐஎம் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஒவைசி, “நிதிஷ் குமாரின் அரசாங்கத்திற்கு எங்கள் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் சீமாஞ்சல் பகுதிக்கு நீதி கிடைக்க வேண்டும். எவ்வளவு காலம் பாட்னா மற்றும் ராஜ்கிரை மையமாகக் கொண்டு எல்லாம் நடக்கும்? நதி அரிப்பு, பெரிய அளவிலான இடம்பெயர்வு மற்றும் ஊழல் ஆகியவற்றால் சீமாஞ்சல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.
எங்கள் 5 எம்எல்ஏக்களும் வாரத்திற்கு இரண்டு முறை அவரவர் தொகுதி அலுவலகங்களில் அமர்ந்து, அவர்களின் இருப்பிடத்துடன் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள். அது அவர்கள் இருக்கும் இடத்தை சரியாகக் காண்பிக்கும். இந்த வேலையை ஆறு மாதங்களுக்குள் தொடங்க முயற்சிப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நானும் அங்கு சென்று பார்க்க முயற்சிப்பேன்.
பிஹார் மக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். குறிப்பாக, ஆர்ஜேடி கூட்டணியால் பாஜகவைத் தடுக்க முடியாது என்று நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன்” இவ்வாறு ஒவைசி தெரிவித்தார். நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேர்வை தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது.