பவன் கேரா

 
இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு முன் ஜாமீன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி சர்மா. இவருக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும் பல பாஸ்போர்ட்களை இவர் வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ரிங்கி சர்மா அளித்த புகாரை தொடந்து பவன் கேராவுக்கு எதிராக அசாம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரிய பவன் கேராவின் மனுவை குவாஹாட்டி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அவரது மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஏ.எஸ்.சந்துருகர் அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. பவன் கேரா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அசாம் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இருதரப்பு வாதங்களை தொடர்ந்து, தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், "பவன் கேரா மற்றும் புகார்தாரரின் கணவரும், அசாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா இரு தரப்பினரும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். வழக்கில் சாட்சி களையும், ஆதாரங்களையும் பவன் கேரா கலைக்கக் கூடாது, அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT