கர்னூல்: ஆந்திராவில் டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் மந்திராலயம் சென்ற பக்தர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், சிக்மங்களூரு பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஒரு வேனில் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்திராலயம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்கு புறப்பட்டனர். இந்த வாகனம் நேற்று அதிகாலை கர்னூல் அருகே உள்ள மந்திராலயம் சிலகலதோன் எனும் இடத்தில் வந்த போது, எதிரே வந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த குமார் (60), தீபிகா வீணா (35), சுனில் (40), பெல்லி (3), மீனாட்சி (50) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் எமிங்கனூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் இறந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இதே மருத்துவமனையில் 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்குவதாக பிரதமர் அறிவித்தார்.
மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், விபத்து குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து, சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், படுகாயம் அடைந்த 13 பேருக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார்.