காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கி நாடா மாவட்டத்தில் வெட்லபாலம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டா மண்டலத்தின் வெட்லபாலம் கிராமத்தில் சூர்யா பட்டாசு உற்பத்தி ஆலையில் இன்று (பிப்.28) பிற்பகல் 2.45 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்தபோது சுமார் 20 தொழிலாளர்கள் உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காக்கிநாடா காவல் கண்காணிப்பாளர் ஜி.பிந்து மாதவ் கூறுகையில், “வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலையை சுற்றியுள்ள நெல் வயல்களில் சிதறிக் கிடந்த 15 சடலங்களை மீட்டுள்ளோம். நெல் வயல்களில் இறந்த உடல்களை அடையாளம் காண ட்ரோன்கள் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உயர் சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
ஆந்திர உள்துறை அமைச்சர் வாங்கலப்புடி அனிதா, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஷன் மோகன் மற்றும் எஸ்பி பிந்து மாதவ் ஆகியோருடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியை ஒருங்கிணைத்து வருகிறார். ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்க காக்கிநாடா நகரம் மற்றும் பெத்தபுரம் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டாசு ஆலை வெட்லபாலம் கிராமத்தைச் சேர்ந்த அடபால வீரபாபு என்பவருக்குச் சொந்தமானது ஆகும். இந்த உற்பத்தி ஆலை 2027 வரை இயங்க உரிமம் பெற்றுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது.