இந்தியா

“போதைப்பொருளால் நாட்டின் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல்” - அமித் ஷா

மோகன் கணபதி

புதுடெல்லி: போதைப்பொருள் பிரச்சினை என்பது உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நார்கோ ஒருங்கிணைப்பு மையத்தின் 10-வது உயர்நிலைக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “போதைப்பொருள் பிரச்சினை என்பது சட்டம் - ஒழுங்கு அல்லது பொதுமக்களின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. இது, உள்நாட்டு பாதுகாப்பு, சமூகத்தின் நிலைத்தன்மை, நாட்டின் பொருளாதார பாதுகாப்பு, இளைஞர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. எனவே, இந்த சவாலை வெற்றி கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த சூழல் உருவாகி இருக்கிறது. உள்நாட்டு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்காக இந்த முயற்சியில் நாம் முழுமையான வெற்றியைப் பெறுவது மிக மிக அவசியம்.

இன்று போதைப்பொருள் குற்றவாளிகள் தொழில்நுட்ப ரீதியாக வலுவடைந்துள்ளனர். அவர்கள் வலிமையான நெட்வொர்க் மூலம் செயல்படுகிறார்கள். எனவே, இதற்கான நமது பதில் நடவடிக்கை என்பது தெளிவானதாகவும், புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலானதாகவும், தொழில்நுட்ப அடிப்படைகளைக் கொண்டதாகவும், நவீன போர்முறையைப் போன்றும் இருக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் சரணடைந்த பல நாடுகள் உள்ளன. மனித நேயத்தைக் காரணம் காட்டி கைது செய்யப்படுவதை அவர்கள் தவிர்க்கிறார்கள். உண்மையில் மனித நேயம் காரணமாக கைது செய்யப்படுவதை தவிர்க்கவில்லை. மாறாக, அவர்களின் சிறைகள் ஏற்கெனவே நிரம்பி வழிகின்றன. கூடுதல் சிறைக் கைதிகளை கையாள முடியாத நிலை உள்ளது. எனவே, இதை கருத்தில் கொண்டு அவர்கள் சட்டத்தை திருத்துகிறார்கள்.

நாட்டின் அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்கள், தலைமைச் செயலாளர்கள் உள்பட இங்கு கூடியுள்ள அனைத்து உயர் அதிகாரிகளிடமும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கூட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்பதே அது. போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் நமது நாடு இன்று ஒரு மிக முக்கிய கட்டத்தில் உள்ளது. போதைப்பொருள் நம்மை ஆட்கொள்ளப் போகிறதா அல்லது நாம் போதைப்பொருட்களை வெல்லப் போகிறோமா என்பதை அடுத்த மூன்று ஆண்டுகள் தீர்மானிக்க உள்ளன.

நமது நாட்டின் அடுத்த 100 ஆண்டு காலத்தைக் கருத்தில் கொண்டு நாம் உறுதியுடன் வெல்ல வேண்டிய போர் இது. நமது கூட்டு முயற்சிகளின் மூலமாகவே நாம் இதில் வெற்றிபெற முடியும். இது ஏதோ ஒரு துறை, ஒரு மாநிலம், ஒரு அரசு அல்லது ஒரு தனிநபர் மட்டும் தனியாகப் போராடி வெல்லக்கூடிய ஒன்றல்ல. இந்த போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில், நாம் வெற்றிபெற ஆனமீகத் தலைவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என அனைவரும் ஒரு பொதுத் தளத்தில் ஒன்றிணைய வேண்டும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT