திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் ஆங்காங்கே கள்ள ஓட்டுப் புகார்கள் எழுந்தன. இதனால், சில பகுதிகளில் போராட்டங்கள் அரங்கேறின.
கேரளாவில் நேற்று தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றாலும் மாநிலத்தின் பல தொகுதிகளில், வாக்காளர்கள் வாக்களிக்கச் சென்ற போது அவர்களது வாக்கு ஏற்கெனவே பதிவானதாகக் கூறி அதிகாரிகள் தடுத்தனர். குறிப்பாக, வடக்காஞ்சேரி தொகுதியில் சஜீவ் என்ற வாக்காளர் வாக்களிக்கச் சென்றபோது, அவரது வாக்கு ஏற்கெனவே தபால் வாக்காகப் பதிவாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோன்று, கோழிக்கோடு குட்டியாடி தொகுதியில் பெண் ஒருவரின் வாக்கு தபால் வாக்காக ஏற்கெனவே பதிவாகியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், பாலக்காட்டின் மலம்புழா, ஷோரனூர், காசர்கோடு திருக்கரிப்பூர் மற்றும் திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு ஆகிய இடங்களிலும் இத்தகைய புகார்கள் எழுந்தன. அடையாளச் சான்றுகளை முறையாகச் சமர்ப்பித்த பிறகு, பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் 'டெண்டர்' வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.