நடிகை ரன்யா ராவ்
பெங்களூரு: கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த ஆண்டு மார்ச்சில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.8 கோடி தங்கம், ரூ.2.4 கோடி ரொக்கம் சிக்கியது.
வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது தங்கக் கடத்தல், அந்நிய செலாவணி மோசடி உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். காபிபோசா வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
தங்கக் கடத்தல் வழக்கில் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து ரன்யா ராவ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வ நாத் கவுடர், ரன்யா சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதை அடுத்து சிறையில் இருந்து ரன்யா ராவ் வெளியே வந்தார்.