இந்தியா

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு - காங்கிரஸ் மூத்த தலைவர் டைட்லர் மீது குற்றப்பத்திரிகை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றனர். அதன்பின் டெல்லி உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. அப்போது 1984 நவம்பர் 1-ம் தேதி தல் சிங், தாக்குர் சிங், குர்சரண் சிங் என்ற 3 சீக்கியர்கள் டெல்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ கடந்த 2010-ம் ஆண்டு தெரிவித்தது. எனினும் 2013-ம் ஆண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜகதீஷ் டைட்லர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், ‘‘புல் பங்காஷ் பகுதியில் குருத்வாரா ஆசாத் மார்க்கெட் பகுதியில் கும்பலை கூட்டி சீக்கியர்களுக்கு எதிராக ஜகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியுள்ளார். அந்த குருத்வாரா தீயிட்டு எரிக்கப்பட்டது. அதில் தாக்குர் சிங் உட்பட 3 சீக்கியர்கள் உயிரிழந்தனர்’’ என்று கூறப்பட்டுள்ளது. சிபிஐ தெரிவித்துள்ள குற்றங்கள் குறித்து ஜூன் 2-ம் தேதி பரிசீலிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT