புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பணியாற்றியதை நான் பாக்கியம் மற்றும் கவுரவமாக கருதுகிறேன் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் வியாழக்கிழமை சிறிய மாற்றும் செய்யப்பட்டது மத்திய சட்டத்துறை அமைச்சாராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,"பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பணியாற்றியதை பாக்கியமாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் மக்களுக்கு நீதி மற்றும் சட்டசேவைகளை வழங்குவதற்காக வழங்கிய பெரிய ஆதரவிற்கு நான் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே ஈடுபாடு மற்றும் உத்வேகத்துடன் புவி அறிவியல் அமைச்சராக பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற உழைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
கிரண் ரிஜிஜு, நீதிபதிகளை நியமிக்க தற்போது நடைமுறையில் உள்ள கொலிஜீயம் முறைக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். பல்வேறு பொது மேடைகளில் கொலிஜீயம் அமைப்பை, அரசியலமைப்புக்கு விரோதமானது, நீதிபதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் ஒரே முறை என்றெல்லாம் விமர்சனம் செய்திருந்தார். அதே போல் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேசவிரோத குழுக்களின் பகுதியாக இருப்பதாக அவர் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.