வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வர நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட் மீதான விவாத நடைபெற்றது. அதில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலளித்துப் பேசும்போது, "வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை விரைவில் மீட்கப்படும். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் குறித்து அந்நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் தரும் தகவல்கள் அனைத்தும் உடனக்குடன் உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கப்படும்.
கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வர நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை.
இந்த அரசு, அதிக வரி விதிக்கும் அரசாக செயல்படவில்லை. மத்திய பட்ஜெட், பொருளாதாரத்தை பெருக்குவதிலும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது.
அதிக வரி விதிப்பதால், தொழில்துறையில் வளர்ச்சி காண முடியாது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள், உள்நாட்டு சந்தையில் உள்ள போட்டியை இல்லாமல் செய்துவிடும். அதிக வரி நுகர்வோர்களையும் குறைத்து விடும். வாடிக்கையாளர்கள், பொருட்களை தான் வாங்குவார்கள், வரியை விலைக் கொடுத்து வாங்க மாட்டார்கள்.
கடன் வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தை குறைக்க முடியாது. தற்போது முதலீட்டாளர்களின் நம்பிக்கை இழந்து உள்ளனர். நாம் முதலில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மியூட்சுவல் ஃபண்ட் மீதான கடன்களின் வட்டி விகிதத்திலான உயர்வு ஜூலை 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
அதே போல, நேரடி வரியினை தாமதமாக செலுத்துவோர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய நேரடி வருவாய் வாரியம் தீர்மானிக்கும்" என்றார்.