சென்னை: தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா மறைவுக்கு ஆளுநர் மற்றும் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், ஐஏஎஸ் அதிகாரியுமான நரேஷ் குப்தா இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய இவர், பனிக்காலத்தில் நடந்த தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதற்காக நன்கு அறியப்பட்டவர்.
இதனிடையே அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜ் பவன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும் காந்தியப் பற்றாளருமான நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் (ஓய்வு) மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். உள்துறைச் செயலாளர், மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலாளர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.