ஹைதராபாத்தில் கிரிக்கெட் ஆடும் போது காயமடைந்த 21 வயது நபர், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
கடந்த ஞாயிறன்று மிர் ஆலம் இத்கா மைதானத்தில் வாஜித் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும் போது கேட்ச் பிடிக்க ஓடிச்சென்றிருக்கிறார். அப்போது மைதானத்தில் விளையாடிய மற்றொரு அணியின் வீரர் மட்டையைச் சுழற்ற இவரது நெற்றியில் காயம் பட்டுள்ளது, இதில் நிலைகுலைந்து கல்லினால் வைக்கப்பட்ட ஸ்டம்பில் விழுந்து நினைவிழந்துள்ளார், மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் சென்றனர், அங்கு அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று பஹத்புரா போலீஸ் நிலைய ஆய்வாளர் டி.லஷ்மிநாராயணா தெரிவித்தார்.
இதனையடுத்து மரணமடைந்த வாஜித்தின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் இபிகோ பிரிவு 324-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
எந்த பேட்ஸ்மெனின் மட்டை இவரது நெற்றியைத் தாக்கியதோ அந்த பேட்ஸ்மெனையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த மைதானத்தில் நெரிசல் அதிகம், நிறைய அணிகள் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இதனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.