இந்தியா

இளம் வீரர் உமர் பயஸை கொன்றது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள்: விசாரணையில் உறுதி செய்தது இந்திய ராணுவம்

பிடிஐ

இளம் ராணுவ வீரர் உமர் பயஸை, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமர் பயஸ் (23). ராணுவத்தில் லெப்டினன்ட்டாக இருந்தார். ஜம்முவின் அக்னூர் பகுதியில் ராஜ்புதனா ரைபிள்ஸ் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரை கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி. கிலானி நேற்று கூறியதாவது:

தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. குல்காம் பகுதியில் ராணுவத்தினரிடம் இருந்து துப்பாக்கிகளை லஷ்கர் தீவிரவாதிகள் பறித்து சென்றனர். அதேபோல் ஷோபியான் பகுதியில் கடந்த 2-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள், ராணுவத்தினரின் ஆயுதங்களைப் பறித்துச் சென்றனர். இந்நிலையில் உமர் பயஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அவரை தீவிரவாதிகள் சித்ரவதை செய்ததற்கான தடயங்கள் எதுவும் உடலில் இல்லை. ஆனால், ராணுவத்தினரிடம் இருந்து பறித்துச் சென்ற துப்பாக்கியால் அவரை கொன்றுள்ளனர். எனவே, இது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.இவ்வாறு ஐ.ஜி. கிலானி கூறினார்.இதற்கிடையில் உமர் பயஸை கொன்றது ஹிஸ்புல் தீவிரவாதிகள்தான் என்று ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர்.-

SCROLL FOR NEXT