புதுடெல்லி: கடந்த 1951-ம் ஆண்டு முதல் பொது தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது இந்தியாவில் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 45.67 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டனர். அதன்பின் வாக்காளர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. வாக்கு சதவீதம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 91.20 கோடியாக உயர்ந்தது. இவர்களில் 67.40 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். நகர்ப்புறங்களில் சுமார் 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை. வேலை காரணமாக வெளியிடங்களுக்கு செல்வோர், ஓட்டுப்போட சொந்த ஊர் திரும்புவதில்லை. சமீபத்தில் நடந்த குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலிலும் இதே நிலைதான் ஏற்பட்டது.
இதனால் தொலைவிடங்களில் இருந்தே வாக்காளர்கள் வாக்களிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு வர தேர்தல் ஆணையம் விரும்புகிறது. ஆனால் இதற்கு அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு மற்றும் சட்ட திருத்தம் ஆகியவை கொண்டு வர வேண்டும். புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் வாக்குப்பதிவை அதிகரிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
தற்போது வாக்காளர் எண்ணிக்கை கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 94.50 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1951-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாக்காளர் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வழிகளையும் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.