இந்தியா

உதவி ஆட்சியராகிறார் பி.வி.சிந்து

என்.மகேஷ் குமார்

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவரை உதவி ஆட்சியராக நியமிக்கும் சட்டத் திருத்தத்தை ஆந்திர அரசு நேற்று நிறைவேற்றியது.

ஆந்திர மாநில சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு மாவட்ட உதவி ஆட்சியர் பதவி வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘‘மாநில அரசு விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை தேடி கொடுத்தார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. விரைவில் அவர் உதவி ஆட்சியராக பணியமர்த்தப்படுவார்’’ என்றார்.

SCROLL FOR NEXT