இந்தியா

சந்திரனில் சிக்கியவருக்கு மும்பை போலீஸ் பதில்

செய்திப்பிரிவு

மும்பை: சந்திரனில் சிக்கி இருக்கிறேன் என்று தகவல் தெரிவித்தவருக்கு மும்பை போலீஸார் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளனர்.

மும்பை போலீஸார், சமீபத்திய சமூக ஊடக தகவல்களைபயன்படுத்தி புதுமையாகவும் நகைச்சுவையாகவும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை போலீஸார், மும்பை போலீஸ் ஹைனா என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை உரு வாக்கி, “உங்கள் வாழ்வில் ஏதாவது பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டி இருந்தால், உடனடியாக 100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்” என பதிவிட்டிருந்தனர்.

இதைப் பார்த்த பிஎம்எஸ் கான் என்பவர், “நான் இங்குசிக்கி உள்ளேன்” என பதிவிட்டார். அத்துடன் சந்திரனில் விண்வெளி வீரர் ஒருவர் நிற்பதுபோன்ற படத்தை பகிர்ந்திருந்தார். இதற்கு மும்பை போலீஸார் பதில் அளிக்கையில், “இது எங்கள் எல்லைக்குள் வராது. ஆனால், சந்திரனுக்கும் நாங்கள் வருவோம் என நம்பியது மகிழ்ச்சி அளிக்கிறது” என நகைச்சுவையாக பதிவிட்டனர். இதைப் பார்த்த இணைய வாசிகள் பலர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில் ஒருவர், “உங்கள் இருப்பிடத்தை பகிருங்கள் என போலீஸார் கேட்காததற்கு நன்றி” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “சார் முதலில் சந்திரனில் சிக்கிய அந்த நபரின் வாகன ஆவணங்களை சரிபாருங்கள்” என பதிவிட்டுள்ளார். “மும்பை போலீஸார் மீம்ஸ் பக்கங்களை தொடங்க வேண்டும்” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT