இந்தியா

குஜராத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

நவ்சாரி: அகமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் குஜராத்தின் வல்சாத் நகரை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் பரூச் மாவட்டம் அங்கலேஷ்வர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. நவ்சாரி மாவட்டம் வெஸ்மா என்ற கிராமத்துக்கு அருகில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரில் 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். பேருந்து பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார். 28 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் நவ்சாரி, வல்சாத் மற்றும் சூரத் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலை தடுப்பை தாண்டிச் சென்று பேருந்து மீது கார் மோதியுள்ளது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. அதிக வேகமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட் தலைவர்கள் ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.- பிடிஐ

SCROLL FOR NEXT