இந்தியா

கேரள மாநிலம் சபரிமலையில் நிலம் கையகப்படுத்த உத்தரவு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு அருகில் உள்ள செருவல்லி எஸ்டேட்டில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விமான நிலையத்துக்காக கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செருவல்லி எஸ்டேட்தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எருமேலி மற்றும் மணிமலா கிராமத்தில் 2,570 ஏக்கர் நிலம்கையகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர்த்து செருவல்லி எஸ்டேட்டுக்கு வெளியே 370 ஏக்கர் பரப்பிலான நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதால்பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்யும்.அவர்கள் ஒப்புதலின் அடிப்படையிலே நிலம் கையகப்படுத்தப்படும். அதேபோல், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய விமான ஆணையம் பரிந்துரை செய்யும் நிலம்தான் விமானநிலையத்துக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தப்பட இருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் விமானம் நிலையம் அமைப்பதற்கு ஏதுவான தன்மை இருப்பதும் தெரிய வந்தது. அனைத்து வேலைகளும் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டால் விமான நிலையம் 3 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைந்தால் இப்பகுதியில் சுற்றுலா வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சபரிமலை கோயிலுக்கு அருகே இந்த விமான நிலையம் அமைய இருப்பதால், இது சபரிமலை விமான நிலையம் என்று அழைக் கப்படுகிறது.

SCROLL FOR NEXT