மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தில், அமைச்சர் வெங்கய்ய நாயுடு திங்கள் கிழமை திடீர் சோதனை மேற்கொண்டபோது பணிக்கு தாமதமாக வந்த 80 அலுவலர்கள் சிக்கினர்.
வெங்கய்ய நாயுடுவின் நகர்புற வளர்ச்சித்துறை அலுவலகம் நிர்மான் பவனில் உள்ளது. இங்கு பணிகள் தொடங்கும் நேரம் காலை 9 மணி என்பதால், சுமார் 10 மணிக்கு திடீர் என அங்கு வந்தார் நாயுடு. தாமாகவே பொறுமையுடன் ஒவ்வொரு அதிகாரி, துணை அதிகாரி மற்றும் அலுவலர்களின் அறைகளுக்கு சென்றார். அதில் சுமார் நூறு பேர் கொண்ட அலுவலகத்தில் 80 சதவீத அலுவலர்கள் இருக் கையில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அமைச்சர் தனது அருகில் இருந்த உதவியாளர்களிடம் கேட்டபோது அவர்கள், “இது ஒன்றும் புதிதல்ல, அன்றாட நிகழ்வு” என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், தாமதமாக வந்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், தாமதத்தை தடுப் பதற்கு கைரேகை பதிவு செய்யும் ‘பயோ மெட்ரிக்’ கருவியை பொருத்தவும் உத்தரவிட்டார். இதன்படி 15 நிமிட தாமதம் மட்டுமே அனுமதிக்கப்படும், அதன் பிறகு வருபவர்களுக்கு அன்றைய நாளுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யவும் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.