இந்தியா

புதிய ராணுவத் தளபதி நியமனத்தில் விதிமீறல் இல்லை: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக பதில்

செய்திப்பிரிவு

புதிய ராணுவ தளபதி நியமனத்தில் மத்திய அரசு விதிகளை மீறியுள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, தற்போதைய பாதுகாப்புச் சூழல்களைக் கருத்தில்கொண்டே பிபின் ராவத் நியமிக்கப்பட்டதாக பதிலளித்துள்ளது.

பதவி மூப்பு அடிப்படையில் புதிய ராணுவ தலைமைத் தளபதி நியமனம் நடக்கவில்லை என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, "பதவி மூப்பு அடிப்படையில் ஐந்து மூத்த அதிகாரிகள் பரிசீலனையில் இருந்த நிலையில், பாதுகாப்புச் சூழல்களை எதிர்கொள்வதன் கீழான முக்கியத்துவங்களின்படி லெப்டினென்ட் ஜெனரல் ராவத் மிகவும் பொருத்தமானவர் என்பதை மத்திய அரசு கண்டறிந்தது.

ராணுவ விவகாரம் மீது அரசியலை புகுத்த வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயக விதிமுறைகளை மீறும் கட்சி என்றால், அது காங்கிரஸ் தான். பாஜக எப்போது ஜனநாயக விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உறுதியுடன் இருக்கிறது" என்றார் அவர்.

ராணுவத் தளபதி நியமன சர்ச்சையின் பின்னணி:

தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறும்போது, "கிழக்கு பிராந்திய கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பிரவீண் பாஷி, தெற்கு பிராந்திய தலைமை கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிஷ் ஆகியோர் மூத்த ராணுவ அதிகாரிகள் ஆவார்.

ஆனால் பதவி மூப்பில் 4-வது இடத்தில் உள்ள பிபின் ராவத்தை தலைமைத் தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. அவரது திறமை குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பவில்லை. பதவி மூப்பின் அடிப்படையிலேயே தலைமைத் தளபதியை தேர்வு செய்ய வேண்டும் என்பது நடைமுறை விதி. அந்த விதியை மீறியது ஏன்?

தலைமை ஊழல் கண் காணிப்பு ஆணையர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நியமனத்தில் மத்திய அரசு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ராணுவத் தலைமைத் தளபதி நியமனத்திலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது" என்றார் அவர்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா கூறும்போது, "ஒட்டுமொத்த நாட்டுக்கும் ராணுவம் சொந்தமானது. எனவே எந்த அடிப்படையில் தலைமைத் தளபதி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறித்து மத்திய அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். உயர் பதவிகள் நியமனத்தில் மத்திய அரசு தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் நலனுக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானது" என்றார்.

SCROLL FOR NEXT