இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, லிபியா, மலாவி, மாலி, ருமேனியா ஆகிய 7 நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் இணையதளங்களில் ஹேக்கர்களின் அத்துமீறல்களை உறுதி செய்துள்ள வெளியுறவு அமைச்சகம், முடக்கப்பட்டுள்ள அந்தத் தளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருவதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, "தூதரக இணையதளங்களில் அத்துமீறல் நடந்த தகவலை அறிவோம். ஹேக்கர்கள் பயன்படுத்திய கணினி ஐ.பி. முகவரியை கண்டெறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இந்த ஏழு இணையதளங்களை சீரமைக்கும் பணியும், ஹேக்கர்கள் மீண்டும் அத்துமீறாத வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
'கபுட்ஸ்கி, காசிமியர்ஸ்-எல்'
இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் அவற்றில் இருந்து திரட்டிய தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்துள்ளனர். தூதரக அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண், இமெயில் முகவரி, பாஸ்போர்ட் எண் ஆகியன ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளன.
இந்த இணையதளங்களை முடக்கியுள்ள ஹேக்கர்கள் தங்களை ஊடகங்களில் கபுட்ஸ்கி, காசிமியர்ஸ்-எல் என்ற அமைப்பினர் என அடையாளப்படுத்தியுள்ளனர்.
7000 இந்திய இணையதளங்கள் மீது அத்துமீறல்:
கடந்த செப்டம்பர் மாதம் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய திடீர் தாக்குதலுக்குப் பின் ஒரே மாதத்தில் 7000 இந்திய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதுதவிர கடந்த மாதம் 32 லட்சம் டெபிட் கார்டுகளின் தகவல்கள் கசிந்தது. ஏடிஎம் மையம் மூலமாக ஹேக்கர்கள் செயற்படுத்திய மால்வேர் காரணமாக டெபிட் கார்டு ரகசிய தகவல்கள் கசிந்தன.