இந்தியா

கங்கனா பாஜகவில் சேர்வது வரவேற்கத்தக்கது; ஆனால் தேர்தலில் போட்டி? - ஜே.பி.நட்டா விளக்கம்

செய்திப்பிரிவு

இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடிப்பது வழக்கம். தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமயங்களில் இவரது கருத்துகள் அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை எழுப்பும்.

இதனிடையே, “தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுத்தால் அதற்கு நான் தயார். ஏனெனில் அனைத்து வகையான பங்கேற்பையும் விரும்புபவள் நான். கடினமாக உழைக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். இமாச்சல பிரதேச மக்கள் விரும்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

ஆம் ஆத்மி கட்சியின் போலி வாக்குறுதிகளுக்கு இமாச்சல பிரதேச மக்கள் ஏமாற மாட்டார்கள். இலவசங்கள் குறித்த அறிவிப்புகளும் இங்கு கவனம் பெறாது” என சில நாட்களுக்கு முன் கங்கனா தெரிவித்தார்.

இந்த நிலையில் கங்கனாவின் இந்த கருத்துக்கு பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விளக்கமளித்திருக்கிறார். ஊடகத்திடம் பேசிய நட்டா, ``கங்கனா பாஜகவில் சேர்வது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதென்பது அவரின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல. அவற்றை முடுவெடுக்க கட்சியின் அடிமட்டத்திலிருந்து தேர்தல் குழு, நாடாளுமன்ற வாரியம் வரை ஆலோசனைச் செயல்முறை உள்ளது" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT