கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு சட்டவிரோதமாக உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, சிபிஐ கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் 12 பேருக்கு எதிராக சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தெற்கு கொல்கத்தாவின் அலிப்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் மேற்கு வங்க மத்திய பள்ளிப் பணிகள் ஆணைய முன்னாள் ஆலோசகர் சாந்தி பிரசாத் சின்கா, மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரிய தற்காலிக குழுவின் முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது. மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.