டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை உடைத்து டெல்லியில் ஆட்சி அமைக்க முயல்வதாக பாரதிய ஜனதா கட்சியினர் மீது புகார் எழுந்துள்ளது.
"ரூ. 20 கோடி விலையில் பாஜக பல எம்.எல்.ஏ.க்களை வாங்க முயல்கிறது. எங்கள் எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியாமல் காங்கிரஸிடம் முயல்கிறது. மிகவும் தவறான முறையில் ஆட்சி அமைப்பது என்ன ஜனநாயகம்? இப்படி ஆட்சி அமைப்பவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியுமா? இதில், பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்?" என ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: "ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. மேலும், எந்த ஒரு சூழலிலும் அது போன்ற செயலில் பாஜக ஈடுபடாது. இதை முழு நம்பிக்கையுடன் என்னால் கூற முடியும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை பாஜக விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை" என்றார்.
ஆளுநரை சந்திக்க அனுமதி:
இதற்கிடையில், டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதை ஒட்டி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்திக்க அனுமதி கோரியுள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்திக்க அனுமதி கோரியுள்ளேன். அவரது பதிலுக்காக காத்திருக்கிறேன்" என பதிவு செய்துள்ளார்.