காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் நேற்று நடைபயணத்தை தொடங்கினார். திருவனந்தபுரம் மாவட்டம், பாரசாலாவில் உள்ள கடையில் கட்சியினருடன் சேர்ந்து அவர் தேநீர் அருந்தினார். படம்: பிடிஐ 
இந்தியா

கேரளாவில் ராகுலின் நடைபயணம் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் நேற்று நடைபயணத்தை தொடங்கினார்.

“பாரத் ஜோடா யாத்ரா’’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று கேரளாவில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

திருவனந்தபுரம் மாவட்டம், பாரசாலாவில் இருந்து தொண்டர்கள் புடைசூழ அவர் நடந்து சென்றார். வழிநெடுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் சசி தரூரும் நடைபயணத்தில் பங்கேற்றார்.

கேரளாவில் பாரசாலாவில் இருந்து நிலம்பூர் வரை மொத்தம் 450 கி.மீ. தொலைவை ராகுல் காந்தி கடக்க உள்ளார்.

விழிஞ்சியத்தில் அதானி துறைமுகத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் தலைவர்களை, ராகுல் இன்று சந்தித்து பேசுகிறார்.

வரும் 14-ம் தேதி கொல்லம், 17-ம் தேதி ஆலப்புழா, 21-ம் தேதி எர்ணாகுளம், 23-ம் தேதி திருச்சூர், 26-ம் தேதி பாலக்காடு, 28-ம் தேதி மலப்புரம் ஆகிய பகுதிகளை அவர் சென்றடைவார்.

கேரளாவில் 19 நாட்கள் நடைபயணத்துக்குப் பிறகு அவர் கர்நாடகாவுக்கு செல்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT