இந்தியா

மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல்: யஷ்வந்த் சின்ஹாவுக்கு சிறை

செய்திப்பிரிவு

ஜார்க்கண்ட் மின்வாரிய அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில், பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட 55 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஒன்று செவ்வாய்க்கிழமை சிறைக்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி விண்ணிப்பிக்க மறுத்ததால் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.பி.பால் உத்தரவிட்டார்.

மின்வெட்டு பிரச்சினைக்காக ஹசாரிபாக்கில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் தன்னைக் கட்டிப் போட்டதாக ஜார்க்கண்ட் மின்வாரிய ஹசாரிபாக் கிளை பொது மேலாளர் தனேஷ் ஜா புகார் செய்திருந்தார். இதையடுத்து சின்ஹா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கயிற்றால் ஜாவின் கைகளை கட்டிப் போடும்படி கட்சியின் மகளிர் பிரிவினருக்கு தான் உத்தரவிட்டதாக பத்திரிகையாளர்களிடம் ஒப்புக்கொண்டார் சின்ஹா.

“பொது மேலாளரின் கைகளை கட்டிப்போடும்படி நான் கட்சியின் பெண் தொண்டர்களுக்கு உத்தரவிட்டேன். மின்வெட்டு காரணமாக பெண்கள் மிகவும் அவதியுறுகிறார்கள். மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது” என்றார் சின்ஹா.

ஆர்ப்பாட்டம் செய்த பெண்களிடம் இருந்து ஜாவை காவல்துறை துணை கண்காணிப்பாளர் விடுவித்தார். தனக்கு நிகழ்ந்தது அவமானகர சம்பவம் என்று வேதனைப்பட்டார் ஜா.

SCROLL FOR NEXT