இந்தியா

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: வதந்திகளை கட்டுப்படுத்த கைது நடவடிக்கை தீர்வாகாது- மனித உரிமைகள் ஆணையம் கருத்து

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு கைது நடவடிக்கைகள் மட்டுமே தீர்வாகாது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஹெச்.எல்.தத்து கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி அனு மதிக்கப்பட்டார். முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக 8 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உட்பட 50-க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், வதந்திகளை கட்டுப்படுத்த கைது நடவடிக் கைகள் தீர்வாகாது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான ஹெ.எல்.தத்து கூறியுள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன தின விழாவில் பங்கேற்ற அவரிடம், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதாக வழக்குப்பதிவு செய்யும் நிகழ்வுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஹெ.எல்.தத்து, ‘‘கருத்தினை வெளிப்படுத்துகிற அடிப்படை உரிமை குடிமக்களுக்கு உள்ளது. வதந்திகளை கட்டுப்படுத்தவும், அவற்றை நிறுத்தவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்த சூழலில் கைது நடவடிக்கைகள் மட்டுமே வதந்திகளை கட்டுப் படுத்த தீர்வாக அமையாது’’ என்றார்.

          
SCROLL FOR NEXT