புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 4.2 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் இந்த ஆண்டில் இதுவரை 2 முறை மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லி தவிர நாடு முழுவதும் நேற்று முன்தினம் 3-வது முறையாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 81 லட்சம் வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.5,500 கோடி ஆகும்.
இதுகுறித்து என்ஏஎல்எஸ்ஏ தலைவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளவருமான யு.யு.லலித் கூறும்போது, “நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண மக்கள் நீதிமன்றம் உறுதுணையாக உள்ளது. இதன்மூலம் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கிறது” என்றார்.
2-வது மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.9,422 கோடி மதிப்பிலான 95 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த ஆண்டில் நடைபெற்ற 3 மக்கள் நீதிமன்றங்கள் மூலம் மொத்தம் 2.2 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக என்ஏஎல்எஸ்ஏ தெரிவித்துள்ளது.