இரோம் ஷர்மிளா வரும் 10-ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கவிருக்கிறார். ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தை எதிர்த்து தனது போராட்டத்தை தொடர்வதற்காக அவர் கட்சி தொடங்குகிறார்.
ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரோம் ஷர்மிளா. கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் துறந்தார்.
இந்நிலையில், அவர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு வழக்கு நேற்று (புதன்கிழமை) இம்பால் மேற்கு நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். உயிரை மாய்த்துக் கொள்ள பட்டினி கிடக்கவில்லை என்றும் தனது லட்சியத்தில் வெற்றி காண உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தினேன் என்றும் அவர் கூறினார். இதனையடுத்து, இரோம் ஷர்மிளா மீதான கொலை முயற்சி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இரோம் ஷர்மிளா, அக்டோபர் 10-ம் தேதி புதிய கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறினார்.
முதல்வர் ஆசையும்.. ஆதரவின்மையும்..
ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா தனது போராட்டத்துக்கான ஆதரவு குறைந்து வருவதாகக் கூறி கடந்த ஆகஸ்ட் 9-ல் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்.
அப்போதே அவர் அரசியல் விருப்பத்தையும் குறிப்பிட்டார். ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை திரும்பப்பெறுவதற்காகவே தான் முதல்வராக விரும்புவதாகக் கூறினார். ஆனால், அவரைச் சார்ந்த சேவ் ஷர்மிளா இயக்கத்திலேயே அவருக்கு ஆதரவில்லை. இந்நிலையில், 10-ம் தேதி அரசியல் கட்சி தொடங்கவிருக்கிறார்.