அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்துவதைக் கண்டித்தும் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, திக்விஜய் சிங், சக்திசிங் கோஹில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படம்: பிடிஐ 
இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு | சோனியாவிடம் 3-வது நாளாக விசாரணை - புதிய சம்மன் வழங்கப்படவில்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 3-வது முறையாக 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருக்கு புதிய சம்மன் எதுவும் வழங்கப்படவில்லை.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா நேற்று காலை 11.15 மணியளவில் 3-வது முறையாக ஆஜரானார். அப்போது அவருடன் பிரியங்கா வதேரா மற்றும் ராகுல் உடன் சென்றனர். நேற்று அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை நடந்த 3 விசாரணைகளில் சுமார் 100 கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளித்துள்ளார்.

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து டெல்லி விஜய் சவுக் பகுதியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணி செல்ல முயன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி, கவுரவ் கோகோய், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சக்தி சிங் கோஹில், ரஞ்சித்ரஞ்சன், மாணிக்கம் தாகூர் உட்பட 75 எம்.பி.க்கள் நேற்று கைது செய்யப்பட்டு டெல்லி கிங்ஸ்வே போலீஸ் லைனுக்கு பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ”சட்டங்களை தவறாக பயன்படுத்தி, ஒரு சிலரை அவமானப்படுத்தும் சம்பவம் நடக்க கூடாது. நிதி மோசடி தடுப்பு சட்டம் கவலையளிக்கிறது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘எதிர் தரப்பு அரசியல் தலைவர்கள், எதிரிகளாக நடத்தப்படக்கூடாது. சோனியா காந்தியிடம் தொடர் விசாரணை நடத்துவதற்கு முன்பு அவரது வயதையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாத அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் விசாரணை அமைப்புகளின் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது. போர்க்காலத்தில் கூட, பெண்களை துன்புறுத்தக் கூடாது என மன்னர்கள் உத்தரவுகள் பிறப்பிப்பது வழக்கம். வயதான மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட சோனியா காந்தியிடம் விசாரணை அமைப்புகள் கடுமையாக நடந்து கொள்ள கூடாது’’ என்றார்.

ரயில் மறியல்

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மும்பை போரிவாலி ரயில் நிலையத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். நேற்று காலை 10.15 மணியளவில் அவர்கள் குஜராத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை வழிமறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை ரயில்வே போலீசார் அப்புறப்படுத்தினர்.

SCROLL FOR NEXT