இந்தியா

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம்: தியாகியின் சகோதரர்களிடம் சிபிஐ விசாரணை

ஏஎன்ஐ

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியின் ஒன்றுவிட்ட சகோதரர்களான சந்தீப், சஞ்சீவ், ராஜீவ் ஆகிய மூவரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இதில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறித்து சஞ்சீவ் தியாகியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “கடவுள் மட்டுமே அறிவார்” என்றார்.

சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, “எஸ்.பி. தியாகியுடன் சொத்து தொடர்பு இருப்பதாக அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இத்தாலிய இடைத்தரகர்கள் கார்லோ கெரோசா, கைடோ ஹாஸ்கே ஆகியோரிடம் நிதித் தொடர்புகள் இருந்ததாக சஞ்சீவ் தியாகி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தொழிலபதிபர் கவுதம் கைதானிடம் நடந்த விசாரணையில் அவரது நிறுவனத்துக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கும் இடையே பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை அவர் மூடிமறைப்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தன.

மிகமுக்கியப் பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப் பட்டது. இதற்காக அந்த நிறுவனம் இந்திய தரப்பில் ரூ.360 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் இந்த வார தொடக்கத்தில் சிபிஐயும், பிறகு கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்களில் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தின. இதைத் தொடர்ந்து அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT