பிஹார் தலைநகர் பாட்னாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக் கப்பட்டிருந்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவை மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். படம்: பிடிஐ 
இந்தியா

மருத்துவமனையில் லாலுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் நிதிஷ் குமார்

செய்திப்பிரிவு

பாட்னா: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீனில் இருந்து வரும் ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் உள்ள தனது வீட்டில் படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டை எலும்பு முறிந்தது. இதையடுத்து அவர் பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது சிகி்சைக்குப் பின்னர் லாலுவின் உடல்நிலை சீராக இருந்தாலும் அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து லாலு நேற்று மாலை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மருத்துவமனைக்குச் சென்று லாலுவை சந்தித்து நலம் விசாரித்தார்.

நிதிஷ் குமார் கூறும்போது, “லாலுவின் மருத்துவ செலவை பிஹார் அரசு ஏற்கும். இது அவரது உரிமை. நாங்கள் இருவரும் பழைய நண்பர்கள். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்றார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “எனது தந்தை சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சினைக்கு டெல்லியில் சிகிச்சை எடுத்து கொண்டார். அவரது உடல்நிலையை அங்குள்ள மருத்துவர்கள் நன்கறிவார்கள். எனவே அவரை டெல்லிக்கு அழைத்து செல்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT