இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மறு பயன்பாட்டு விண்கலம் சோதனை முயற்சியாக திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பல்வேறு செயற்கைக்கோள் க ளை விண்ணில் நிலைநிறுத்து வதற்காக ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் இந்த ராக்கெட்டை மறுமுறை பயன்ப டுத்த முடியாது.
இதை தவிர்க்க மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் 'ரீயூசபிள் லாஞ்சிங் வெஹிகிள் - டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்' (RLV TD) என்ற புதிய விண்க லத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் ரூ.95 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் 6.5 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்டதாகும். இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சோதனை முயற்சியாக திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து ராக்கெட் போல புறப்பட்ட இந்த விண்கலம், விண்ணில் 50 கி.மீ உயரத்தை தொட்டதும் ஆர்எல்வியின் பூஸ்டர் பிரிந்தது. பின்னர், 70 கி.மீ உயரத்தை தொட்டதும் தரை தள விஞ்ஞானிகள் வழிகாட்டுதலின்படி வங்கக்கடல் பகுதியில் மீண்டும் வெற்றிகரமாக இறக்கப்பட்டது.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோவின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “திட்டப்படி அனைத்தும் செயல்பட்டன. இஸ்ரோவின் இந்தச் சோதனை, மறுபயன்பாட்டு விண்கலம் உரு வாக்கத்தில் ஆரம்பகட்ட முயற்சி தான்” என தெரிவித்தார்.
இந்தச் சோதனை முயற்சி வெற்றி மூலம் ராக்கெட்களை செலுத்துவதற்கான செலவு குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட ஆர்எல்வி-டீடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானி களின் கடுமையான உழைப்பே காரணம். அவர்களுக்கு வாழ்த்து களை தெரிவித்துக்கொள்கிறேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் விஞ்ஞானிகளும், இஸ்ரோவும் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தது அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறு பயன்பாட்டு விண்கலம் - சில முக்கிய தகவல்கள்:
செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் ராக்கெட் ஒருமுறை பயன்பாட்டுடன் முடிந்துவிடும்.
இதை தவிர்க்க மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் 'ரீயூசபிள் லாஞ்சிங் வெஹிகிள் - டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்' (ஆர்எல்வி - டிடி- RLV—TD HEX—01 ) என்ற பெயரில் புதிய விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் எஸ்யூவி காரின் அளவு மற்றும் எடை அளவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பூமியில் இருந்து 70 கி.மீ. உயரத்தில் பறக்கவிட்டு தரை தள விஞ்ஞானிகள் வழிகாட்டுதலின் படி வங்கக் கடல் பகுதியில் விண்கலத்தை மீண்டும் இறக்க முடிவு செய்யப்பட்டது.
விஞ்ஞானிகளின் கடின உழைப்பில் ரூ.95 கோடி செலவில் உருவான இந்த விண்கலம் பூமிக்கு திரும்பும்போது உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கும் திறன்கொண்டது. இதற்காக விண்கலத்தின் வெளிப்புறத்தில் வெப்பம் தாங்கும் ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளது.
செலவு குறையும்:
இந்த விண்கலத்தின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளதால், இனி வருங்காலங்களில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.