இந்தியா

மேற்குவங்க சட்டப்பேரவையில் 100 கோடீஸ்வர ஏம்எல்ஏ.க்கள்

பிடிஐ

மேற்குவங்க சட்டப்பேரவையில் ரூ.40 கோடி சொத்துக்கு அதிபதியான பணக்கார எம்எல்ஏ.வும், வெறும் ரூ.50,000 மட்டுமே வைத்துள்ள ஏழை எம்எல்ஏ.வும் இடம்பெற்றுள்ளனர்.

மேற்குவங்க சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 294 எம்எல்ஏ.க்களின் சொத்து விவரங்களை ‘வெஸ்ட் பெங்கால் எலெக்ஷன் வாட்ச்’ நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.

வேட்பு மனுத் தாக்கலின் போது தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வின் படி, அதிக சொத்து வைத்திருப்பவர்கள் பட்டியலில் முதலிடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்தாங்ரா தொகுதி எம்எல்ஏ சமிர் சக்ரபோர்த்தி உள்ளார்.

ரொக்க கையிருப்பு, வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை, முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்கள் உட்பட மொத்தம், ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துக்கு இவர் அதிபதியாக உள்ளார்.

கோடீஸ்வர எம்எல்ஏ சமிர் இடம் பெற்றிருக்கும் அதே சட்டப் பேரவையில், ரூ.1,000 மட்டுமே கையிருப்பு வைத்திருக்கும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ இம்ராகிம் அலியும் உள்ளார்.

கிழக்கு பன்ஸ்குரா தொகுதி யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவரே மேற்குவங்க சட்டப் பேரவையின் ஏழை எம்எல்ஏ.வாக கருதப்படுகிறார். எனினும், இவர் தனது வங்கிக் கணக்கில், ரூ.48,703 உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவரைத் தவிர, ரூ.75,000 மட்டுமே சொத்து வைத்திருக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ புந்தரிக்காக்ஷய சாஹாவும் இதே சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளார்.

மொத்தமுள்ள 294 எம்எல்ஏ.க்களில், 100 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதில், முதல் பத்து பேர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மொத்த எம்எல்ஏ.க்களில் 20 சதவீதம் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை.

          
SCROLL FOR NEXT