மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் பன்மொழி அறிவுசார் இணையதளம் அமைக்கப்பட உள்ளது. இந்திய மொழிகளை உலக அளவில் கொண்டு செல்ல இது பயன்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ‘டிஜிட்டல் இந்தியா’ மத்திய அமைச்சகங்களின் அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்திய மொழி அறிவை உலக அளவில் இணையதளம் மூலமாக கொண்டு செல்ல முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக, ‘பரத்வானி’ எனும் பெயரில் உலகிலேயே பெரிய இணையதளம் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இதில் இந்தியாவின் அனைத்து மொழிகள் பற்றிய முழு விவரங்களை பதி வேற்றம் செய்ய அத்துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளார். இத்துடன் செம்மொழி இலக்கியங்களின் மின்னணுப் பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
இந்த மின்னணுப் பதிவுகள் இந்தியாவின் முக்கிய எழுத் தாளர்கள், அரசு மற்றும் தனியார் பொது அமைப்புகளின் நூலகங் கள், பதிப்பாளர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் பற்றிய விவரங்களை கொண்டிருக்கும். எழுத்துரு, மென்பொருள் தட்டச்சு சாதனங்கள், செயலி, பல்வேறு மொழிகளையும் மொழிபெயர்க்கும் மென்பொருள் உட்பட ஐ.டி. தொடர்பான தொழில் நுட்ப சாதனங்கள் அனைத்தும் பரத்வானியில் இடம்பெற உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “நவீன ஐ.டி. தொழில்நுட்பம் இந்தியாவின் அனைத்து மொழி களுக்கும் பயன்பட வேண்டும் என் பதும், உலகின் அனைத்து சமூகத் தினரும் இதனால் பலன் பெறவேண் டும் என்பதும் பரத்வானியின் முக்கிய நோக்கம் ஆகும். இதன் மூலம் உலகின் இணையதளங் களில் இந்திய மொழிகள் பரவலாக் கப்படுவதுடன் அவற்றின் மீதான ஆய்வுகளுக்கும் வழி வகுக்கும். இந்த இணையதளத்தை மைசூரில் உள்ள இந்திய மொழிகள் துறை நிர்வகித்து வரும்” என்று தெரிவித் தனர்.
இந்த புதிய இணையதளம் வழி யாக இந்திய மொழிகளை கற்பிக் கும் வகையில் குறுகியகால பாடத் திட்டங்களும் நடத்தப்பட உள்ளன. இது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டினருக்கு அதிக பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே இணையதளத்தில் பன் மொழியினருக்கும் பல்வேறு பயன்களை பரத்வானி அளிக்கும் என மனிதவள மேம்பாட்டுத் துறை உறுதி அளிக்கிறது.